பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 மார்ச், 2015

ஸ்லிப்பான் சாரி!!!

'மேட் இன் இந்தியா'
நண்பர்களே,  

நம்மில் ஒரு சிலருக்கு ஒருசில விஷயங்கள் பிடிக்காது.  அதேபோல்தான் எனக்கு சாரி கொஞ்சம் கூட பிடிக்காது.

 ஏன் சாரி ரொம்ப நல்ல விஷயம் தானே, அதுவும் ரொம்ம நாகரீகமான விஷயம் தானே.

மனிதன் கற்காலத்தில் பச்சையாக உண்டு பின்னர் சமைத்து உண்டு, தனித்தனியாக வாழ்ந்து  பின்னர் கூடி வாழ்ந்து அதன்பின்னர் சமூக அமைப்பை வகுத்து... இப்படி பல பரிமாணங்களில், நிர்வாணம் தொடங்கி, மர இலை, பட்டைகளை உடுத்தி,பின்னர் விலங்குகளின் தோலை ஆடையாக்கி உடுத்தி, அதன் பின்னர் பருத்தி ஆடை, பட்டாடை, சிந்தடிக் ஆடை போன்று எண்ணற்ற பரிணாம நாகரீக வளர்ச்சி அடைந்து கலை இலக்கியம் பண்பாடு நாகரீகம் மொழி, அந்தஸ்த்து, மரியாதை பரிதாபம், இரக்கம்,  மகிழ்ச்சி,வருத்தம் போன்ற எல்லா குணநலன்களையும் அபிவிருத்தி செய்து படிப்படியாக நாகரீக முன்னேற்றம் அடைந்து தற்கால நவ நாகரீக மனிதராக  மாறி இருப்பதை உணர்த்தும் பல விஷயங்களுள்  சாரியும் ஒன்று என்றால் அது மிகை அல்ல, எனினும் சாரி  ஏன் எனக்கு  பிடிக்காது என்று  நினைகின்றீர்கள் அல்லவா.

சொல்லுகின்றேன் .

இதுவும் கல்லூரி நாட்களில் மாணவ மாணவியருடன் சேர்ந்து கல்வி பயின்ற காலங்களில் ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்வுதான்.

என்னதான் முதன் முறையாக பெண்களுடன் சேர்ந்து கல்வி பயின்றாலும், பெண்களுடனான எமது நட்பும் அணுகுமுறையும் எல்லை வகுக்கபட்டதாகவும் மிகவும் ஜென்டிலாகவும் நாகரீகமாகவும் தான் இருந்தது.
ஆண் நண்பர்களைபோலவே பெண் தோழியரும் என்மீது மிகுந்த அன்புடனும் சகஜமாகவும் பழகுவார்கள்.

சில நேரங்களில் பெண் தோழியரின் சில குடும்ப விஷயங்களைகூட, என்னிடம் வைத்துள்ள நல்ல அபிமானத்தினாலும் நம்பிக்கையினாலும், பகிர்ந்துகொண்டிருந்திருக்கின்றனர்.

இப்படி நானும் என் இனிய நண்பனும், அதாங்க ஆந்திராபோகும்போது உடன்வந்தாரே (சமரசம்)அவரேதான். எல்லோரின் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்து கொண்டதை எங்களின் ஜூனியர் மாணவர் ஒருவர் கவனித்து எங்களுடன் நட்பு நாடிவந்து நண்பனானார். இத்தனைக்கும் அவர் துறை வேறு எங்கள் துறை வேறு.

இப்போது நானும் என் நண்பனும் எங்கே இருந்தாலும் இந்த ஜூனியர் நண்பரும் எங்களோடு வந்து சேர்ந்துகொள்வார்.தேடிவந்து இணைந்துகொள்வார்.

 அவரும் எங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர் என்பதையும் கடந்து ஒரு தம்பியாகவே பழகி வந்தார். தினமும் பலமுறை நாங்கள் மூவரும் சந்தித்து கொள்வதும் நலம் விசாரித்துகொள்வதும் இடைவேளை நேரத்தில் இணைந்தே தேநீர் பருகசெல்வதும் என எங்கள் நட்பு நாளுக்கு நாள்    நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருந்தது.

இப்படி எங்களுடனான  நட்பினை இன்னும் கௌரவிக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் அவரது அக்கா குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா நடைபெறுவதாகவும் அதில் நாங்கள் இருவரும் கலந்து கொள்ளும்படியும் அதை தொடர்ந்து அவரது வீட்டில் நடைபெறும் மத்திய உணவு விருந்தில் பங்குபெரும்படியாகவும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

அதற்கென்ன கண்டிப்பாக வருகின்றோம் என்றைக்கு விழா என கேட்டதற்கு , வரும் ஞாயிற்றுக்கிழமை நகரின்  மத்தியில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் ஞானஸ்நானம் என்றும் பின்னர் அங்கிருந்து பத்து நிமிட வாகன பயண தூரத்தில் இருக்கும் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிறு நன்றி படையல் வழிபாடும் அதை தொடர்ந்து அங்கேயே மத்திய உணவும் ஒழுங்கு செய்திருப்பதாகவும் கூறினார்.

வார நாட்களிலேயே செய்ய எந்த வேலையும் இருக்காது இதில் ஞாயிறுக்கிழமை செய்ய என்ன பெருசா இருக்க போகுது?

இளைய நண்பர் ஒரு அன்பு கட்டளையையும் இட்டார், அதாவது கண்டிப்பாக எந்த பரிசுபொருளும்  வேண்டாம் என்று.

நம்மை ரொம்ப நெருக்கத்தில் இருந்து கவனித்ததின் விளைவாக இருக்குமோ?  அதாவதுபல நேரங்களில் தேநீர் கடையில் "ஒன் பை டூ" அல்லது "டூ பை த்ரீ" என்று வாங்கி குடித்ததினால் எங்கள் 'பண வீக்கத்தையும்' பணவசதியில் நாங்கள் 'வீக்' என்பதையும் நன்கு அறிந்திருப்பாரோ?

சரி நாங்கள் கண்டிப்பாக வருகின்றோம் என வாக்களித்ததோடு, நாங்கள் ஏதேனும் விழாவன்று உதவிகள் செய்யவேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்கள் என்றும் சொன்னதை கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆமாம் என்ன குழந்தை என்று தெரிவவில்லையே நாமும் கேட்க்க மறந்துவிட்டோமே.

விழா நாளும் வந்தது.

என்னதான் மாணவராகிய எங்களின் வறுமையின் நிறம் சிகப்பு என்றாலும்  ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாக குழந்தைக்கு  நல்ல வெள்ளை நிறத்தில்    அழகிய ஒரு குதிரை பொம்மையை பர்மா பஜாரில் பேரம் பேசி வாங்கி அதை அழகாக பேக் செய்து  விழா அன்று கொண்டு சென்றோம்.

 ஆலயத்தில் எங்களை பார்த்த எங்கள் நண்பருக்கு ரொம்ப சந்தோஷம், அவர் தமது குடும்பத்தாரோடு அமர்ந்திருந்தார் எங்களை பார்த்தவுடனே நாங்கள் இருக்கும் பக்கமாக வந்து எங்களை கைகுலுக்கி அழைத்து சென்று அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்திருந்த வரிசையிலேயே எங்களை அமர செய்து அவரும் எங்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டார்.

பெயர்சூட்டும் வைபவம் இனிதே நடந்தேறியது.

Image result for picture of child baptism

குழந்தைக்கு "ஷர்லி நிவேதிதா" என பெயர் சொட்டினார் ஆலய போதகர். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு பெண் குழந்தை என்று.  நல்ல வேலை குதிரை பொம்மை வாங்கியிருந்தோம்.

ஆலய வழிபாடு முடிந்து , நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் எங்களை அவர்களின் உறவினர்களுக்கென்று ஏற்பாடு செய்திருந்த வேனில் ஏறும்படி கூறி அவரும் எங்களோடு வீடு வந்தார்.

வீட்டில் மொட்டைமாடியில் பந்தல் போடபட்டிருந்தது, அதில் நாற்காலிகளும் மேசைகளும் வரிசையாக போடபட்டிருந்தது.

மீண்டும் ஆலய போதகர் வந்து குழந்தையை ஆசீர்வதித்து தமது வாழ்த்துக்களை சொல்லி பிரத்தியேகமாக பிரார்த்தனை செய்தார்.

அந்த நேரத்தில் மொட்டை மாடி நிரம்பி வழிந்ததால் நானும் என் நண்பரும் எங்கள் இளைய நண்பரிடம் சொல்லிவிட்டு கீழே  வந்து மாடிப்படி தொடங்கும் இடத்தில் சுவரோடு ஒட்டி இருந்த ஜன்னல் மாடத்தில் அமர்ந்துகொண்டோம்.

 இன்னும் யாரும் குழந்தைக்கு பரிசுபொருட்களை கொடுக்க ஆரம்பிக்க வில்லை எனவே நாங்களும்  கொண்டு சென்ற பரிசை கொடுக்காமல் எங்களுடனேயே வைத்திருந்தோம்.

அந்த நேரத்தில் மாடி படியில் ஏறுவதும் இறங்குவதுமாக சிறுபிள்ளைகள் விளையாடிகொண்டிருந்த்னர். நாங்களும் அவர்களோடு பேசிக்கொண்டு அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டு அவர்கள் விளையாடுவதை பார்த்துகொண்டிருந்தோம்.

அந்த நேரம் பார்த்து மேலே இருந்த என் நண்பரின் தங்கை ஹை ஹீல்ஸ் செருப்பணிந்துகொண்டு, புதிதாக அன்றுதான் முழு நீள சாரியும் அணிந்துகொண்டு , வேகமாக படியிலிருந்து இறங்கி திரும்பும்போது நாங்கள் உட்கார்ந்திருந்ததை பார்க்காமல் எங்கள் மேல் கால்தவறி நிதானம் இழந்து கீழே விழுந்துவிட்டாள்.

விழுந்தவுடன் நாங்கள் பதறிபோய் சாரி ரொம்ப அடிபட்டுவிட்டதா?என கேட்கவும் கூடி இருந்த சிறு பிள்ளைகள் கேலியாக சிரிக்கவும் அந்த பெண்ணுக்கு வெட்கமும் அவமானமும் மேலோங்க அழுதுகொண்டே வீட்டிற்குள் ஒடிவிட்டாள்.

இதை பார்த்த அந்த சிறு பிள்ளைகள் , எங்கள் நண்பனின் அப்பாவிடம் நடந்த வற்றை சொல்லும்போது நாங்கள் இருவரும் வேண்டுமென்றே காலை நீட்டி அந்த பெண்ணை தடுக்கி விழ செய்ததாகவும் அதனால் தான் நாங்கள் சாரி சொன்னதாகவும் சொல்லி இருக்கின்றனர்.

 கோபப்பட்ட என் நண்பனின் அப்பா எங்கள் இருவரையும் சாடை மாடையாக  அதே சமயத்தில் சரமாரியாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.

உண்மையிலேயே நாங்கள் சாரி சொன்னது ,நாங்கள் தவறிழைத்துவிட்டோம் என்பதற்காக அல்ல,அந்த பெண் கீழே விழுந்து விட்டதை எண்ணி   வருந்துவதாக பொருள்படும் சாரியைதான் சொன்னோம்.

எங்களுக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. மேலே இருந்த எங்கள் நண்பனுக்கு அவரது அப்பா யாரை திட்டுகின்றார் எதற்கு திட்டுகின்றார் என்று தெரியாத நிலையில் அவரது அப்பாவிடம் கேட்டிருக்கின்றார் என்ன விஷயம் என்று.

அதற்க்கு அவர் அப்பா சொல்லி இருக்கின்றார் ,"நீ அழைத்து வந்த உன் சீனியர் நண்பர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா" என கூறி அவருக்கு சொல்லப்பட்ட விஷயத்தை நண்பனிடம் சொல்ல, எங்கள் நண்பனோ, "அதெல்லாம் ஒருகாலும் அவர்கள் செய்திருக்க மாட்டாட்கள்" என கூறிவிட்டு, அவசர அவசரமாக எங்களை பார்க்க கீழே வந்தார், நாங்களோ அவமானத்தால் கூனிகுருகி அந்த இடம் விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

கீழே வந்த எங்கள் நண்பர் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இல்லாததை கண்டு வீட்டிற்கு உள்ளே அழுதுகொண்டிருந்த  தன் தங்கையிடம் "நடந்தது என்ன?" என விசாரித்து இருக்கின்றார்.

அவரது தங்கைக்கு அந்த சிறு பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் என்ன சொன்னார்கள் என்பதோ அவர் எங்களை திட்டிகொண்டிருந்த விஷயமும்   அறியாதவளாய் , தான் மாடிப்படியிலிருந்து   வேகமாக இறங்கும்போது உங்கள் நண்பர்கள் அமர்திருப்பதை பாராமல் அவர்கள் காலில் மோதி இடறி  விழுந்துவிட்டேன் எனவும் உங்கள் நண்பர்கள் மீது எந்த தப்பும் இல்லை எனவும் தான் தான் வேகமாக வந்து மோதிகொண்டதாகவும் சொல்லிக்கொண்டே நாங்கள் அமர்திருந்த இடத்திற்கு நண்பனின் தங்கை வந்து பார்க்க அங்கே நாங்கள் இல்லாமல் நாங்கள் விட்டு வந்த அந்த குதிரை பொம்மையை மட்டும் பார்த்து  வருத்தப்பட்டாளாம்.

 இதை என் நண்பன் தன் தந்தையிடம் விளக்கி சொல்ல அவரும் எங்களை திட்டியதற்காக வருத்தபட்டதையும் மறு நாள் என் நண்பன் வந்து  எங்களிடம், நடந்தவற்றை ,கூறி மன்னிப்பு கேட்க்க நாங்களும் சரி விடுப்பா எங்களுக்கு நேற்று பிரியாணி சாப்பிட கொடுத்து வைக்க வில்லை அவ்வளவுதான் என சாதாரணமாக சொல்லி அந்த இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக்கி இன்னும் எங்கள் நட்பை வலுவாக இறுக்கி கொண்டோம்.

அன்றுமுதல்  இன்றுவரை "சாரி" என்றாலே எனக்கு கொஞ்சமும் பிடிக்காமல் போய்விட்டது, யார்சொன்னாலும்கூட.

"சாரி" நான் வேற எதுவோ சொல்லபோறேன்னு நீங்க நினைத்திருந்தால் ரொம்ப "சாரிங்க"

நான் இந்த சாரியைதான் (SORRY) இந்த பதிவில் சொல்ல  ஆசைப்பட்டேன். மற்றபடி நீங்க நினைக்கிற(???) "சாரி"(saree) யாருக்குதான் பிடிக்காது?

இப்போது அந்த இளைய நண்பர் நாங்கள் படித்த அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகின்றார் என்பது உங்களுக்கான போனஸ்  செய்தி.

எந்த கல்லூரி எந்த ஊர் என்றெல்லாம் சொல்ல மறந்துட்டேன்  "சாரிங்க"

"சாரி"....... இந்த பதிவை இன்னும் படிக்கவில்லை  ,  "சாரி"...... நேரமில்லைன்னு சொன்னா....... "சாரி"எனக்கு பிடிக்காது அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ



9 கருத்துகள்:

  1. சார், சாரி, கருத்து ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரிக்கு சாரி சொன்ன கந்தசாமி சாருக்கு நன்றிகள் பல.

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. தனப்பால்,

      சிரிப்பொலி சிறகடித்து வந்து எந்தன் செவி சேர்ந்தது.

      வருகைக்கு நன்றி தனப்பால்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. இதை படித்தவுடன் மனதில் ஒரு சோக உணர்வு .

    பதிலளிநீக்கு
  4. இதை படித்தவுடன் மனதில் ஒரு சோக உணர்வு . I am so sorry!

    பதிலளிநீக்கு
  5. நண்பரே! நீங்கள் 'ஸாரி" பற்றி அல்ல "Sorry" எனப்தைப் பற்றித்தான் நீங்கள் சொல்லுவீர்கள் என்று நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். ஸோ...ஸாரி!!! "எனக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத ஒரேவார்த்தை "Sorry" -Ko."

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அருமையின் அருமை அருமைக்குத்தானே தெரியும்

      வருகைக்கு மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு