பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2015

வாய்க்கு சர்க்கரை போடுங்கள்!!

இனிக்கட்டும் இதயங்கள்  

நண்பர்களே,

"இனிப்பு" என்பது நல்ல, மங்களகரமான, மகிழ்ச்சியான, சந்தோஷங்களை நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிபவர், குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் பரிமாறப்படும் ஒன்று என்பது நம் எல்லோரும் அறிந்ததே.

யாரேனும் நல்ல வாக்குகள், அல்லது வாழ்த்துக்கள் சொல்லும்போது "உங்க வாய்க்கு சர்க்கரை போடணும்" என்று சொல்வதும் ஒருவேளை வீட்டில் இருந்தால் உடனே சர்க்கரையை அள்ளி அவர்களின் வாயில் போட்டு தம் மகிழ்ச்சியை தெரிவிப்பதும் வழக்கம் தான்.

அதே போல தமக்கு வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அந்த அரசியல் கட்சியை சார்ந்த தொண்டர்கள், தங்களுக்குள் மட்டுமல்லாது சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் இனிப்பு கொடுத்து மகிழ்வது வழக்கம்.

அதே போல கிரிக்கெட்டில், கால்பந்தாட்டத்தில் மற்றும் பல விளையாட்டுகளில் தாம் ஆதரிக்கும் டீம்கள் வெற்றி பெற்றால் உடனே இனிப்பு கொடுத்து அந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றோம்.

பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண கொண்டாட்டங்களின் போது கேட்கவே வேண்டாம் இனிப்பு கட்டாய மாக இடம் பெறும். திருமண விருந்துகளில் இலையில் முதலில் வைக்கபடுவதே இனிப்புதானே?

புத்தக வெளியீட்டு  விழாக்களிலும் கூட இப்போதெல்லாம் இனிப்பு பரிமாரபடுவதாக கேள்விபட்டேன், புத்தகமே ஒரு இனிப்புதானே அதுவும் அங்கே வந்திருக்கும் விருந்தினரை காண்பதும் இனிமைதானே?

இன்னும் அடுத்த மாதங்களில் வெளியாகபோகும் பரீட்சை முடிவுகளின்போது இந்த இனிப்புகள் அல்லோலகல்லோலபடபோது தெரிந்ததே.

சரி இந்த வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது?

மேற்கு மத்திய அமெரிக்காவில்  அக்டோபர் மாதம் 8 ஆம்  நாள் 1921 ஆம் ஆண்டு "இனிப்பான நாள்" என்று முதன் முதலில் அறிவித்து அதை அமெரிக்கர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  இது முழுக்க முழுக்க வியாபார நோக்கில் கொண்டு வரப்பட்டது.

Image result for PICTURES OF SWEETS

ஆனால் நம் இந்திய அதுவும் தமிழ் பண்பாட்டு நாகரீக பரிணாம வரலாற்றை ஆராய்ச்சி செய்யும்போது  தெய்வ  வழி பாட்டில் மா விளக்கு,சூரணம், கொழுகொட்டை  மற்றும் பல  இனிப்பு வகைகளை படைத்ததாக அறிகின்றோம்.

அதே போல அக நானூறு போன்ற இலக்கிய படைப்புகளில் காதலியை பார்க்க வரும் காதலன் மலையிருக்கும் பாறை இடுக்குகளில் கட்டபட்டிருக்கும் தேன் கூட்டிலிருந்து தானே கொண்டுவந்த அந்த மலைதேனோடு அவனது சிலை தேனை காண காத்திருந்ததாக  அறிகின்றோம்.

ஆனால் இப்போதெல்லாம் காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் "அல்வா" அல்லவா கொடுக்கின்றனராம்.  அதுவும் இனிப்பு தானே?

சரி பதிவின் பாதை மாறுகிறதோ?

இப்படி நம் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள இனிப்பு கொடுத்து பழகிவிட்ட நாம் இந்த காலத்தில் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டி இருக்கின்றது.

கடந்த முறை ஊருக்கு சென்றபோது தெரிந்த ஒரு குடும்பத்தை பார்த்துவரலாம் என்று அவர்களது வீட்டுக்கு சென்றேன், கடந்த காலத்தில் அவர்கள் எங்கள் வளர்ச்சிக்கு பல விதங்களில் தடையாய் இருந்தவர்கள் வரப்பு சண்டையில் உறவு  விரிசலாய்  இருந்தது.

பார்த்து வெகு காலமாகி விட்டதினால் அவர்களை பார்க்க சென்றிருந்தேன் அப்படி செல்லும்போது வெறும் கையேடு செல்வது நன்றாக இருக்காது என்றெண்ணி (கையில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றேன் என்று நினைக்காதீர்கள்),  கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் பழம் வாங்கிகொண்டு சென்றேன்.

கொஞ்சம் வயது முதிர்ந்திருந்த அவர்களை வணங்கிவிட்டு வாங்கிகொண்டுவந்திருந்த இனிப்பையும் பழத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.

எதுக்குப்பா இதெல்லாம் உங்க அன்பு இருந்தா அதுவே போதும் என்று சொல்லி தயக்கத்துடன் அந்த பையை வாங்கி பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததை அவர்கள் முகம் காட்டி கொடுத்து விட்டது.

நானும் கொஞ்சநேரம் அவர்களோடு பேசிவிட்டு அவர்கள் கொடுத்த தேநீரை , சர்க்கரை இல்லாததால்  சர்க்கரைக்கு மாற்று மாத்திரைபோன்று போட்டு கொடுக்க பருகிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

பிறகு வீட்டில் உள்ளவர்கள் சொல்லித்தான்  எனக்கு தெரிய வந்தது அவர்கள் இனிப்போ நான் வாங்கி சென்ற வாழை பழங்களையோ சாப்பிட கூடாது என்று ஏனென்றால் அவர்களுக்கு சர்க்கரை நோயாம்.

அப்போது எனக்கு சுரீர் என்று மனதில் பட்டது, ஒருவேளை அவர்கள் இனிப்பு சாப்பிடகூடாது என்று தெரிந்தே நான் அப்படி செய்ததாக நினைத்துகொள்வார்களோ?, இன்னும் அந்த பழைய பகையின் புகை என் மனதில் இருப்பதாக நினைத்து கொள்வார்களோ? என நினைத்து வருத்தப்பட்டேன்.

மீண்டும் விடுப்பு முடிந்து இருப்பிடம் திரும்பிய நான் இதை என் நண்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் சொன்னார்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் படியான சாக்லட் இப்போது மார்கெட்டில் உள்ளது , அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது அதை வாங்கி சென்று அவர்களுக்கு கொடுத்துவிடு, இதற்காக ஏன் வருந்துகின்றாய் என்றார்கள்.

நான் அடுத்த விடுப்பு வரை காத்திராமல். அடுத்த மாதமே சென்னைக்கு சென்ற என் நண்பர் மூலம் அந்த சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் விசேஷித்த சாக்லட் பார்களை வாங்கி கொடுத்தனுப்பி அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

நண்பரும் அதை கொடுத்த செய்தி அறிந்து மனம் ஆறினேன்.

மேலை நாடுகளில் யார் தேநீர்  அல்லது காபி கொடுத்தாலும் சர்க்கரை வேண்டுமா? வேண்டுமானால் எத்தனை கரண்டி போடவேண்டும் என கேட்டு தான் இனிப்பு கலந்து கொடுப்பது வழக்கம்.

Image result for PICTURES OF DIABETIS CHOCOLATES

நண்பர்களே,  நம் சந்தோஷத்திற்க்காக அடுத்தவர் உடல் ஆரோக்கியத்தில் நாம் நமது விருப்பங்களை நுழைக்கலாமா?

இனி யார் எந்த நல்ல செய்தி , வாழ்த்து சொன்னாலும் அவர்கள் வாயில் சர்க்கரை  போடுவதற்கு முன் அவர்கள்  சர்க்கரை சாப்பிடலாமா என அவர்கள் வாயால் கேட்டு அறிந்தபின் சர்க்கரை அள்ளி கொட்டுங்கள் உங்கள் மகிழ்ச்சியின் தாளத்தை தட்டுங்கள்.

அதே சமயத்தில் உங்கள் சார்பாக வேறொருவரிடம் சொல்லி மற்றவர்களுக்கு அவர்கள் வாய்க்கு சர்க்கரை போடும்படி சொல்லாமல் நீங்களே நேரில் சென்று/வந்து  அதை அவர்களின் அனுமதியுடன் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே,  சுவையும் கூடுமே.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

நேபாளம் இசைக்கட்டும் பூபாளம்!!



கை கொடுப்போம்.

நண்பர்களே,

கடந்த சில தினங்களுக்கு முன் நமது அண்டை, அதே சமயத்தில் நேச நாடான நேபாளத்திலும் ஏனைய பிற  பிராந்தியங்களிலும் ஏற்பட்ட அந்த கொடூரமான நில நடுக்கத்தின் விளைவாக அந்த நாட்டு மக்கள் சந்தித்து கொண்டுவரும் பேரிடரின் பாதிப்புகளை நினைக்கும் போது, தொலை காட்சி , பத்திரிகை, வானொலி ஊடகங்களின் மூலம் அறியும்போது நெஞ்சம் பதை பதைக்கின்றது, கண்கள் குளங்கள் ஆகின்றன. இதயம் ரத்தம் சிந்துகின்றது.

இப்படியாக அவ்வப்போது ஏற்படும் இயற்க்கை சீற்றங்களின் இனம் புரியாத கோர பாய்ச்சலினால் உலகெங்கிலும் அவதிபடுவோர் ஏராளம்.

அந்த வகையில் இப்போது நேபாள நாட்டினை தன்வசபடுத்தி  இருக்கும் இந்த பேரிடரிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாதுகாப்பும், உணவும் அளிக்கும் வகையில், நம் பாரத நாடும் உலகின் பல்வேறு நாடுகளும் அவர்களது நேச கரம் நீட்டி நேபாள மக்களின் கண்ணீரை துடைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவது, உள்ளத்தில்  மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது.

அதே போல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் ஆன உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் தங்களை அர்பணித்து உதவிவருவது பாராட்டுக்குரியது.

உறவுகளை இழந்தனர், உடலுறுப்புகளை இழந்தனர், வீடு, சொத்துக்கள்,வாகனங்கள் போன்ற அவர்களது வாழ்வாதாரத்திற்கு துணை புரிந்த அத்தனை அடிப்படை பலத்தையும் இழந்தபின்னும் எஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றிகொள்ள அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

Image result for PICTURES OF NEPAL DISASTER

பச்சிளங் குழந்தைகள், சிறுவர், பெண்கள் வயோதிகர்,.விலங்குகள் என சாலைகளிலும், சிறிய அளவிலான, பிளாஸ்டிக் கூடாரங்களிலும், உண்ண உணவோ பாதுகாப்பான உடைகளோ ,மருத்துவ உதவிகளோ இன்றி தவிக்கும் நமது சக மனித சகோதர சகோதரிகளின் துயர் துடைக்கும் ஒரு உதவியாக எத்தனையோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடைகளை சேகரித்து வருவதும் ஆங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அவ்வகையில் இங்கிலாந்து நாட்டில் லண்டனை மையமாக கொண்டு செயல் படும்  பேரிடர் துயர் துடைக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (DISASTERS EMERGENCY COMMITTEE) கடந்த செவ்வாய் கிழமை 28 ஆம் தேதி காலையில்,  "தயாவாக உதவுங்கள்" என்றதொரு அறிவிப்பினை செய்திருந்தது.

அந்த அறிவிப்பு வந்த கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் நாட்டின்  எட்டு திக்கிலும் இருந்து நன்கொடைகள் கொட்ட ஆரம்பித்து விட்டன. எண்ணி 24 மணி நேரம் கூட முடிய வில்லை அதற்குள் சுமார் பத்தொன்பது மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வந்து குவிந்தன.

நன்கொடையாக குவிந்த இத்தனைபெரிய தொகையினை தங்கள் கரங்களால் வாரி கொடுத்து குவித்த மனங்களை வாழ்த்தி என் கரம் குவிந்தது, நெஞ்சம் மகிழ்ந்தது, 

எத்தனை பெரிய பண உதவியும் மாண்ட உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாத போதும் இடரில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கான ஒரு சிறு உதவியாக அமையபோகும் இந்த பணம் நல்லபடியாக அவர்களை சென்றடையும் என்று நம்புகின்றேன்.

இந்த உதவிகளினால் மக்களின் மனதில் நீருபூத்த நெருப்பாக தனன்று கொண்டிருக்கும் மனிதாபிமானமெனும் பெருங்குணம் இப்படி தேவையான நேரத்தில் வெளிபட்டிருக்கும் இந்த தருணத்தில், அழுகை குரலும் வேதனை பெரு மூச்சுகளும் , வலியின் தாக்கமும் தழும்புகளும் மறைந்து புத்தம் புது காலை நேபாளத்தில் பூபாளத்துடன் புலரட்டும்.


இது போன்று இன்னும் நம்மால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்வோம் நாமும் இதயமுள்ள மனிதர்களென்றும் மனிதம் மரிக்கவில்லை என்றும் மீண்டும் நிருபிப்போம்.

இயற்க்கை சீற்றங்களை மனித சக்தியால் தடுக்க முடியாது உண்மைதான் அவை நம் கட்டுபாட்டில் இல்லைதான் ஆனால் மற்றவர்க்கு உதவுவதில் நாம் ஒன்றிணைவதை   எந்த இயற்க்கை சக்தியும் தடுக்க முடியாது.

நேபாள மக்கள் துயரிலிருந்து மீண்டு, மீண்டும் தங்களது வாழ்வை கட்டி எழுப்பி மகிழ்வுடன் வாழ இயற்கையின் அதிபதி இறைவனை, அருள்புரிய  வேண்டிக்கொள்வோம். 

Image result for PICTURES OF NEPAL DISASTER

கரம் இணைவோம் கரம் கொடுப்போம்.  


மனமிருந்தால் மார்க்கமுண்டு.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ




ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

"வாருங்கள் வரலாறு பேசுவோம்."

கதைக்கும் பொய்யழகு 

அன்பு இணைய தள - எழுத்துலக குடும்ப உறவுகளே,

வடுகபட்டி வைரமுத்து பேசுகின்றேன்.

தமிழ் சமுதாய பாரம்பரிய , நாகரீக,கலாச்சார, பண்பாட்டு மேன்மையினை உலகறிய நீங்கள் மெளனமாக "மௌஸ்" மூலம் செய்துவரும் சேவை அன்னை தமிழுக்கு நீங்கள் ஆற்றும் அளப்பறிய தொண்டு, ஒருவகையில் யாகம் என்றுகூட சொன்னால் அது மிகை அல்ல.

சனி, 25 ஏப்ரல், 2015

"சிறகில்லா தேவதைகள்"


வாசம் வானிலா?


கதைகளாக கேட்டும் கதைகளில் படித்தும், படங்களில், ஓவியங்களில் சிலைகளில், சிற்பங்களில் பார்த்தும் , நாம் அறிந்தவண்ணம் தேவதைகள் அல்லது தேவதூதர்களுக்கு பறவைகளைப்போல பறப்பதற்கு ஏதுவாக "சிறகுகள்" இருப்பதாக நம் இதயங்களில் விதைக்கப்பட்டு வேரூன்றி இருக்கும்  ஒரு நம்பிக்கை விருட்சம்.

புதன், 22 ஏப்ரல், 2015

யார் யார் எங்கெங்கே?

நண்பனே! நண்பனே!! நண்பனே!!! 


நண்பர்களே,

ஏப்ரல் மாதம்  மாணவர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு மாதமாகும். இந்த மாதம் தான் அவர்கள் ஆண்டு முழுதும் கற்ற கல்வியின் நீல அகல ஆழ உயரங்களை, பரி மானங்களை  அளவிடும் அளவுகோலாக ஆண்டு தேர்வுகள் நடைபெறும் மாதம்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

."நம்பிக்கை தளர்ந்த தும்பிக்கைகள்"

தள்ளி விட்டது தள்ளி நின்றது

நண்பர்களே,

சமீபத்தில் எங்கள் கல்லூரி பேராசிரியர் எழுதிய "புள்ளி வச்ச ராஜா" எனும் புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கையில், பாரதியை குறித்த ஒரு குறிப்பு ஏற்படுத்திய  சிந்தனையின் கலவையே இன்றைய பதிவு.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மனசெல்லாம் மலர் சோலை!!!

குருப்  போட்டோ!!

நண்பர்களே,

நம்மில் எத்தனைபேர்  நமது பள்ளி இறுதியாண்டு அல்லது கல்லூரி இறுதி ஆண்டில் நம்முடன் படித்த மாணவ மாணவியரும், பள்ளி கல்லூரி முதல்வர்கள் நமது ஆசிரியர்கள்  , அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பத்திரபடுத்தி வைத்திருக்கின்றோம்?

வியாழன், 2 ஏப்ரல், 2015

வாசல் கதவை தட்டினாள் ராச லட்சுமி!!

காசு ... பணம்...துட்டு... மணி ....மணி....

நண்பர்களே,

தமிழ் நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடகா, நாகாலந்து, மணிபூர் , திரிபுரா,சிக்கிம் என மாநிலங்களின் பெயர்களை வரிசையாக கேட்க்க நேர்ந்தால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பல விஷயங்களுள் முக்கியமான ஒரு விஷயம், லாட்டரி.